பாடல் #1384

பாடல் #1384: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுயர் நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்கிடி றீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணணுடை நாயகி தனனரு ளாமவழி
பணணுயர நாதம பகையற நினறிடில
விணணமர சொதி விளஙகிடி றீஙகார
மணணுடை நாயகி மணடல மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண் உயர் நாதம் பகை அற நின்று இடில்
விண் அமர் சோதி விளங்க இடில் ஹ்ரீம் காரம்
மண் உடை நாயகி மண்டலம் ஆகுமே.

பதப்பொருள்:

கண் (ஞானக் கண்ணை) உடை (நெற்றியில் உடைய) நாயகி (இறைவியானவள்) தன் (தனது) அருள் (திருவருளால்) ஆம் (அருளிய) வழி (வழியின் படியே நடந்து)
பண் (இசைகளிலே) உயர் (உயர்வான) நாதம் (நாதமாகிய இறைவனை) பகை (அடைவதற்கு தடையாக இருக்கின்ற அகங்கார எண்ணங்கள்) அற (இல்லாமல்) நின்று (தமக்குள்) இடில் (வைத்து இருந்தால்)
விண் (விண்ணுலகத்தில்) அமர் (வீற்றிருக்கும்) சோதி (பேரொளியான இறைவன்) விளங்க (தமக்குள் வீற்றிருக்கும் படி) இடில் (சாதகர் வைத்து) ஹ்ரீம் (‘ஹ்ரீம்’ எனும்) காரம் (பீஜத்திலேயே தியானித்து இருந்தால்)
மண் (பூமியை) உடை (உடையவளாகிய) நாயகி (இறைவியின்) மண்டலம் (சக்தி மண்டலமாகவே) ஆகுமே (சாதகரைச் சுற்றி இருக்கும்).

விளக்கம்:

பாடல் #1383 இல் உள்ளபடி தனது நெற்றியில் ஞானக் கண்ணை உடைய இறைவியானவளின் திருவருளால் அருளிய வழியின் படியே நடந்து இசைகளிலே உயர்வான நாதமாகிய இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அகங்கார எண்ணங்கள் இல்லாமல் தமக்குள் வைத்து இருந்தால் விண்ணுலகத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவன் தமக்குள் வீற்றிருக்கும் படி சாதகர் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்திலேயே தியானித்து இருந்தால் பூமியை உடையவளாகிய இறைவியின் சக்தி மண்டலமாகவே சாதகரைச் சுற்றி இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.