பாடல் #1411

பாடல் #1411: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளங்கிடும் வானிடை நின்றவை யெல்லாம்
வணங்கிடு மண்டல மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளஙகிடும வானிடை நினறவை யெலலாம
வணஙகிடு மண்டல மனனுயி ராக
நலஙகிளர நனமைகள நாரண னொததுச
சுணஙகிடை நினறவை சொலலலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து
சுணங்கு இடை நின்றவை செல்லலும் ஆமே.

பதப்பொருள்:

விளங்கிடும் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு விளங்கி விடும்) வான் (ஆகாயத்தின்) இடை (நடுவில்) நின்றவை (நிற்கின்ற) எல்லாம் (அனைத்து தத்துவங்களும்)
வணங்கிடும் (அவரை வணங்கிடும்) மண்டலம் (இடத்திலெல்லாம்) மன் (வாழுகின்ற) உயிர் (உயிர்கள்) ஆக (ஆகவே அவரும் இருந்து)
நலம் (நலம் தரும்) கிளர் (பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து) நன்மைகள் (அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து) நாரணன் (நரனாக / மனிதனாக இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து) ஒத்து (காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே)
சுணங்கு (உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க) இடை (அதற்கு நடுவில்) நின்றவை (நின்று கொண்டு) செல்லலும் (அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும்) ஆமே (முடியும்).

விளக்கம்:

பாடல் #1410 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு ஆகாயத்தின் நடுவில் நிற்கின்ற அனைத்து தத்துவங்களும் விளங்கிவிடும். அவரை வணங்கிடும் இடத்திலெல்லாம் வாழுகின்ற உயிர்கள் ஆகவே அவரும் இருந்து நலம் தரும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து நரனாக (மனிதனாக) இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க அதற்கு நடுவில் நின்று கொண்டு அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.