பாடல் #1372

பாடல் #1372: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்
கண்டவிம் மூர்த்தங் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
யுண்டங் கொருத்தி யுணர்ந்து கொள்வார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணட கனகங குளைமுடி யாடையாயக
கணடவிம மூரததங கனலதிரு மெனியாயப
பணடமர சொதிப படரித ளானவை
யுணடங கொருததி யுணரநது கொளவாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்
கண்ட இம் மூர்த்தம் கனல் திரு மேனி ஆய்
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவை
உண்டு அங்கு ஒருத்தி உணர்ந்து கொள்வார்க்கே.

பதப்பொருள்:

கொண்ட (தங்களின் கரங்களில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கின்ற சக்திகள் அனைவரும்) கனகம் (தங்க ஆபரணங்களோடும்) குழை (வளைந்து சுருண்டு நீண்டு இருக்கும்) முடி (தலை முடியே) ஆடை (உடுத்தி இருக்கும் ஆடை) ஆய் (ஆகவும்)
கண்ட (சாதகர்கள் தமக்குள் கண்டு அறிந்து கொண்ட) இம் (இந்த) மூர்த்தம் (சக்திகளின் உருவங்கள் அனைத்தும்) கனல் (அக்னிக் கனலே) திரு (தங்களின் திரு) மேனி (உருவம்) ஆய் (ஆக இருக்கின்றார்கள்)
பண்டு (அவர்களின் அக்னிக் கனலாகிய உருவமானது ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாக கலந்து இருக்கும் இறைவியாகவே) அமர் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருந்து) சோதி (ஜோதி வடிவில்) படர் (சாதகருக்குள் முழுவதும் படர்ந்து) இதழ் (சக்திமயங்களாக) ஆனவை (இருக்கின்றாள்)
உண்டு (இப்படி சாதகருக்குள் இருக்கின்ற அனைத்து சக்திமயங்களும்) அங்கு (சக்கரத்தின் நடுவில்) ஒருத்தி (வீற்றிருக்கின்ற இறைவி ஒருத்தியில் இருந்தே பரவி இருக்கின்றது என்பதை) உணர்ந்து (தமக்குள் இருக்கும் இறைவியை உணர்ந்து) கொள்வார்க்கே (கொண்ட சாதகர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1371 இல் உள்ளபடி தங்களின் கரங்களில் ஆயுதங்களுடன் நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து கொண்டு இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் தங்க ஆபரணங்களோடும் வளைந்து சுருண்டு நீண்டு இருக்கும் தலை முடியே அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடையாகவும் அக்னிக் கனலே தங்களின் திரு மேனியாகவும் இருக்கின்றார்கள். இதை தமக்குள் கண்டு கொண்ட சாதகர்கள் அந்த அக்னிக் கனலாகிய உருவமானது ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாக கலந்து இருக்கும் இறைவியாகவே தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் ஜோதி வடிவில் வீற்றிருக்கின்றாள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இப்படி தமக்குள் வீற்றிருக்கின்ற இறைவியை உணர்ந்து கொள்ள முடிந்த சாதகர்களால் அவள் ஒருவளே தமக்குள் முழுவதும் சக்திமயங்களாக படர்ந்து இருக்கின்றாள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.