பாடல் #1345

பாடல் #1345: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒளிக்கும் பராசத்தி யுள்ளே யமரிற்
களிக்கு மிச்சிந்தை யுங்காரணங் காட்டித்
தெளிக்கு மழையுடன் செல்வ முண்டாக்கு
மளிக்கு மிவளை யறிந்து கொள்வார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளிககும பராசததி யுளளெ யமரிற
களிககு மிசசிநதை யுஙகாரணங காடடித
தெளிககு மழையுடன செலவ முணடாககு
மளிககு மிவளை யறிநது கொளவாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையும் காரணம் காட்டித்
தெளிக்கும் அழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.

பதப்பொருள்:

ஒளிக்கும் (பேரொளியாக விளங்குகின்ற) பராசத்தி (அசையும் சக்தியான இறைவி) உள்ளே (சாதகருக்குள் வந்து) அமரில் (வீற்றிருந்தால்)
களிக்கும் (பேரின்பத்தில் திளைக்கும்) இச் (சாதகரின்) சிந்தையும் (மனம் முழுவதும்) காரணம் (அதற்கான காரணமாகவே) காட்டித் (தம்மைக் காட்டி)
தெளிக்கும் (தெளிவு படுத்துகின்றாள்) அழையுடன் (அதன் பிறகு சாதகரை தம்மோடு சேர்த்துக் கொண்டு) செல்வம் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்தும் அருளையும்) உண்டாக்கும் (உண்டாக்கி)
அளிக்கும் (சாதகருக்கு அளிக்கின்றாள்) இவளை (இப்படிப்பட்ட இறைவியை) அறிந்து (முழுவதுமாகத் தமக்குள் அறிந்து) கொள்வார்க்கே (கொண்ட சாதகர்களுக்கே இவை அனைத்தையும் இறைவி அருளுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1343 இல் உள்ளபடி அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்து இருக்கின்ற பேரொளியாக விளங்குகின்ற அசையும் சக்தியான இறைவி சாதகருக்குள் வந்து வீற்றிருந்தால் சாதகரின் மனம் பேரின்பத்தில் திளைத்திருக்கும். அப்போது அந்த பேரின்பத்திற்கு காரணம் தாமே என்பதை இறைவி சாதகருக்கு காண்பித்து தெளிவு படுத்துகின்றாள். அது மட்டுமின்றி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்துகின்ற அருளையும் உருவாக்கி சாதகருக்கு அளிக்கின்றாள். இவை அனைத்தும் பேரொளியாக இருக்கின்ற இறைவியை தமக்குள் முழுவதுமாக அறிந்து கொண்ட சாதகர்களுக்கே இறைவி அருளுகின்றாள்.

One thought on “பாடல் #1345

  1. ராஜேந்திர ராமதாஸர் Reply

    நமசிவாயா. தங்கள் தெய்வீக பனி புனிதமானது சிவ ஜயா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.