பாடல் #1374

பாடல் #1374: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தரும் வழியாகிய தத்துவ ஞானங்
குருவழி யாயங் குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை யறுத்துப்
பெருவழி யாகிய பேரொளி காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரும வழியாகிய தததுவ ஞானங
குருவழி யாயங குணஙகழில நினறு
கருவழி யாய கணககை யறுததுப
பெருவழி யாகிய பெரொளி காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரும் வழி ஆகிய தத்துவ ஞானம்
குரு வழி ஆய் அங்கு குணங்களில் நின்று
கரு வழி ஆய கணக்கை அறுத்து
பெரு வழி ஆகிய பேரொளி காணே.

பதப்பொருள்:

தரும் (இறைவி அருளுகின்ற) வழி (சாதகருக்கான வழி) ஆகிய (ஆக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமும்) தத்துவ (இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ) ஞானம் (ஞானத்தை கொடுத்து)
குரு (குருவாக வீற்றிருந்து) வழி (சாதகருக்கான வழி) ஆய் (ஆகவே) அங்கு (அவருக்குள்ளிருக்கும்) குணங்களில் (தன்மைகளுக்கு ஏற்றபடியே) நின்று (நின்று காட்டி அருளுவாள்)
கரு (அதன் பிறகு சாதகரின் முதல் பிறவியில் இருந்தே தொடர்ந்து வரும் கரு) வழி (வழியாகிய பிறவிகளுக்கும்) ஆய (இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும்) கணக்கை (காரணமாகிய கர்ம கணக்குகளை) அறுத்து (நீக்கி)
பெரு (முக்தி அடைவதற்கான பெரிய) வழி (வழியாக) ஆகிய (இருக்கின்ற) பேரொளி (இறைவனின் பேரொளி) காணே (உருவத்தை காணும் படி செய்து அருளவாள்).

விளக்கம்:

பாடல் #1373 இல் உள்ளபடி இறைவி அருளால் சாதகருக்குள்ளிருந்து மலர்ந்து எழுகின்ற சத்தமும் வெளிச்சமும் சாதகருக்கான வழியாக இருந்து இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ ஞானத்தை கொடுக்கின்றாள். அவளே குருவாக வீற்றிருந்து சாதகருக்குள் இருக்கும் தன்மைகளுக்கு ஏற்றபடியே நின்று காட்டி அருளுகின்றாள். அதன் பிறகு சாதகரின் முதல் பிறவியில் இருந்தே தொடர்ந்து வரும் கரு வழியாகிய பிறவிகளுக்கும் இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும் காரணமாகிய கர்ம கணக்குகளை நீக்கி முக்தி அடைவதற்கான பெரிய வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவத்தை காணும் படி செய்து அருள்வாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.