பாடல் #1386

பாடல் #1386: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாங்கிய நாவித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்ளுணர் வானவ
ளேங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய னாதம் வலியுட னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாஙகிய நாவித தடமலர மணடலத
தொஙகி யெழுஙகலைக குளளுணர வானவ
ளெஙக வருமபிறப பெணணி யறுததிட
வாஙகிய னாதம வலியுட னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாங்கிய நாவி தட மலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்கு உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

பதப்பொருள்:

தாங்கிய (ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தமக்குள்ளே தாங்கி இருக்கின்ற) நாவி (சாதகரின் தொப்புள் கொடியிலிருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின்) தட (தாமரை) மலர் (மலர் போன்ற) மண்டலத்து (மண்டலத்தில் இருந்து)
ஓங்கி (வேகமாக மேலே) எழும் (எழுந்து வரும்) கலைக்கு (நவாக்கிரி சக்கரத்தின் கலைக்கு) உள் (உள்ளே இருக்கின்ற) உணர்வு (உணர்வு வடிவமாக) ஆனவள் (இருக்கின்ற இறைவியானவளை)
ஏங்க (இனி வருகின்ற பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோமோ என்று ஏங்கி இருந்து) வரும் (இனிமேல் வருகின்ற) பிறப்பு (பிறப்புகளை எல்லாம்) எண்ணி (இறைவியையே எண்ணி இருந்து) அறுத்திட (அறுத்து விட)
வாங்கிய (அதன் பிறகு சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த) நாதம் (நாத வடிவான இறைவன்) வலியுடன் (மிகவும் வலிமையுடன்) ஆகுமே (வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1385 இல் உள்ளபடி பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தமக்குள்ளே தாங்கி இருக்கின்ற சாதகரின் தொப்புள் கொடியிலிருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின் தாமரை மலர் போன்ற மண்டலத்தில் இருந்து வேகமாக மேலே எழுந்து வரும் நவாக்கிரி சக்கரத்தின் கலைக்கு உள்ளே இருக்கின்ற உணர்வு வடிவமாக இருக்கின்ற இறைவியானவளை இனி வருகின்ற பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோமோ என்று ஏங்கி இருந்து இனிமேல் வருகின்ற பிறப்புகளை எல்லாம் இறைவியையே எண்ணி இருந்து அறுத்து விட வேண்டும். அதன் பிறகு பாடல் #1383 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த நாத வடிவான இறைவன் மிகவும் வலிமையுடன் வீற்றிருப்பார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.