பாடல் #1322

பாடல் #1322: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நலந்தரு ஞானமுங் கல்வியு மெல்லா
முரந்தரு வல்வினை யும்மை விட்டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நலநதரு ஞானமுங கலவியு மெலலா
முரநதரு வலவினை யுமமை விடடொடிச
சிரநதரு தீவினை செயவ தகறறி
வரநதரு சொதியும வாயததிடுங காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நலம் தரும் ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம் தரும் வல் வினை உம்மை விட்டு ஓடிச்
சிரம் தரும் தீ வினை செய்வது அகற்றி
வரம் தரும் சோதியும் வாய்த்திடும் காணே.

பதப்பொருள்:

நலம் (நன்மைகள் அனைத்தையும்) தரும் (கொடுத்து) ஞானமும் (இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து) கல்வியும் (உலக அறிவை அறிகின்ற கல்விகள்) எல்லாம் (அனைத்தையும் கொடுத்து)
உரம் (மன பலத்தையும்) தரும் (கொடுத்து) வல் (பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான) வினை (வினைகள் அனைத்தும்) உம்மை (சாதகரை) விட்டு (விட்டு விட்டு) ஓடிச் (ஓடி விடும்படியும் செய்து)
சிரம் (மேன்மையான நிலையைக்) தரும் (கொடுத்து) தீ (இனி மேலும் தீமையான) வினை (வினைகளை எதுவும்) செய்வது (செய்து விடுகின்ற நிலையையும்) அகற்றி (இல்லாமல் செய்து)
வரம் (நினைத்ததை அடையும் வரங்களையும்) தரும் (கொடுத்து) சோதியும் (இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற) வாய்த்திடும் (நிலையும் கிடைக்கப் பெறுவதைக்) காணே (காணலாம்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்களுக்கு பாடல் #1321 இல் உள்ளபடி மூன்று விதமான நன்மைகள் அனைத்தையும் கொடுத்து, இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து, உலக அறிவை அறிகின்ற கல்விகள் அனைத்தையும் கொடுத்து, மன பலத்தையும் கொடுத்து அதன் பயனாகப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான வினைகள் அனைத்தும் சாதகரை விட்டு விட்டு ஓடி விடும்படியும் செய்து, மேன்மையான நிலையைக் கொடுத்து அதன் பயனாக இனி மேலும் தீமையான வினைகளை எதுவும் செய்து விடுகின்ற நிலையையும் இல்லாமல் செய்து, நினைத்ததை அடையும் வரங்களையும் கொடுத்து, இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற நிலையும் கிடைக்கப் பெறுவதைக் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.