பாடல் #1408

பாடல் #1408: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அமுத மதாக வழகிய மேனி
படிக மதாகப் பரந்தெழு முள்ளே
குமுத மதாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுத மதாகிய கேடிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அமுத மதாக வழகிய மெனி
படிக மதாகப பரநதெழு முளளெ
குமுத மதாகக குளிரநதெழு முததுக
கெழுத மதாகிய கெடிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழும் முத்துக்கு
எழுதம் அது ஆகிய கேடு இலி தானே.

பதப்பொருள்:

அமுதம் (அமிழ்தம்) அது (எனும் பொருள்) ஆக (ஆகவே மாறி இருக்கும் இறைவியின்) அழகிய (பேரழகுடைய) மேனி (திருமேனியானது)
படிகம் (பளிங்குக் கல்லை) அது (போலவே) ஆக (உறுதியாக) பரந்து (சாதகரை வணங்கும் உயிர்களுக்குள் பரந்து விரிந்து) எழும் (எழுந்து) உள்ளே (உள்ளுக்குள்)
குமுதம் (அல்லி எனும்) அது (மலரைப்) ஆக (போலவே) குளிர்ந்து (குளிர்ச்சியுடன்) எழும் (மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை) முத்துக்கு (முத்துப் போன்ற)
எழுதம் (வடிவமாகவும்) அது (உறுதியான கல்லாகவும்) ஆகிய (ஆக்கி) கேடு (அதற்கு எந்த விதமான தீங்கும்) இலி (இல்லாத) தானே (சக்தியாகிறது).

விளக்கம்:

பாடல் #1407 இல் உள்ளபடி அமிழ்தமாகவே மாறி இருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது பளிங்குக் கல்லை போலவே உறுதியாக சாதகருக்குள் பரந்து விரிந்து எழுந்து அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன் மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆக்கி அதற்கு எந்த விதமான தீங்கும் இல்லாத சக்தியாகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.