பாடல் #1179: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தாரமும் மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.
விளக்கம்:
பாடல் #1178 இல் உள்ளபடி இறைவனோடு துணையாக இருக்கின்ற இறைவியின் தன்மைகளை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவனுக்குத் துணையாகவும் இருக்கின்ற இறைவி அதன் அனைத்து தத்துவங்களாகவும் நிற்கின்றாள். இறைவன் உலகங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போது அதன் காரணமாகவும் இறைவன் எண்ணியபடியே உலகங்களை படைக்கும் போது அதன் காரியமாகவும் எப்போதும் இறைவனோடு கலந்தே இருக்கின்றாள் இறைவி. இறைவனின் பரிபூரண ஜோதியாகிய ஒளி ஒருவத்தோடு கலந்து அதனுள்ளே சக்தியாக அடங்கி இருக்கின்ற ஆதியான இறைவி உலகங்கள் அனைத்தின் அளவுக்கும் பரந்து விரிந்து அதையும் தாண்டி பத்து திசைகளையும் தமக்குள் கொண்டவளாக இருக்கின்றாள்.
