பாடல் #986: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
விளக்கம்:
எட்டு என்பது அகராமாகிய சிவம். இரண்டு என்பது உகாரமாகிய சக்தி. இருமூன்றும் நான்கும் சேர்ந்த பத்து என்பது யகாரமாகிய உயிர். குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட இப்பொருள்களை அனுபவமாக உணராதவர்கள் ‘அ, உ, ய’ எனும் எழுத்துக்களை அறியத் தொடங்கும் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். சாதகர்கள் இந்த எழுத்துக்களின் உட்பொருளை உணர்வதன் மூலம் தன்னை அறிந்து சதாசிவத்தை அடையும் உபாயத்தை உணர்த்துவதே இந்த ஞானப் பாதையாகும்.
