பாடல் #970

பாடல் #970: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்
தோரெழுத்து ஈசனும் ஒண்சுட ராமே.

விளக்கம்:

அனைத்து எழுத்துக்களுக்கும் வேர் போல இருக்கும் ‘ஓம்’ எனும் எழுத்தாகவும், ‘நமசிவாய’ எனும் மந்திர எழுத்துக்களில் ‘சி’ எழுத்து குறிக்கும் ஆகாயமாகவும் அதைத் தாண்டி இருக்கும் அண்ட சராசரங்களாகவும், ‘வா’ எழுத்து குறிக்கும் நீராகவும், ‘ய’ எழுத்து குறிக்கும் நிலத்தை தாங்கி அங்கு இருப்பவனாகவும், ‘ந’ எழுத்து குறிக்கும் நெருப்பாகவும், ‘ம’ எழுத்து குறிக்கும் உயிர் காற்றாகவும் பஞ்ச பூதங்களில் ஐந்தெழுத்து மந்திரமாக இருக்கின்ற இறைவனே ‘ஓம்’ எனும் ஓரெழுத்தின் வடிவத்தில் பேரொளிப் பிழம்பாகவும் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.