பாடல் #983: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.
விளக்கம்:
‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பாடல் #962 இல் உள்ளபடி ஓரெழுத்து மந்திரமாக உணர்ந்து செபித்துக் கொண்டிருந்தால் நினைத்த செயல் கைகூடும். ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வர கொடிய வல்வினைகளும் பிறவித்துயரும் போகும். ‘சிவாயநம’ மந்திரத்தை உள்ளத்துக்குள்ளே உணர்ந்து அறிந்தவர்களுக்கு சதாசிவ பரம்பொருளே வெளிப்பட்டு அருள் புரிவார்.
