பாடல் #962: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.
விளக்கம்:
பாடல் #961 இல் உள்ளபடி சாதகருக்குள் வேள்வியாக இருக்கும் ‘ஓம் நமசிவாய’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை செபிக்கும் முறை அறிந்தவர்கள் கூட அந்த ஆறு எழுத்துக்களும் ஒரு எழுத்திலேயே அடங்கியிருப்பதை அறிந்து அதை ஓதி உணராமல் இருக்கின்றார்கள். இந்த ஆறெழுத்துக்களும் அடங்கியிருக்கும் ‘ஓம்’ எனும் ஓரெழுத்தை மட்டும் வேறு எழுத்துக்கள் எதுவும் துணையின்றி ஓதி உணரக்கூடியவர்களுக்கு அந்த ஓரெழுத்தே உயிருக்குள் இருக்கும் இறைவனை உணர வைக்கும்.
குறிப்பு: ‘ஓம் நமசிவாய’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை பல கோடி முறை செபிக்கும் சாதகர்கள் அந்த ஆறெழுத்து மந்திரத்தை ஒரேழுத்து மந்திரமாக உணர்வார்கள்.
