பாடல் #942: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.
விளக்கம்:
பாடல் #941 இல் உள்ளபடி இறைவனின் திருவைந்தெழுத்தின் இயல்பை அடைந்த சாதகர்கள் அதனுடன் ஓங்காரம் சேர்த்து ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தின் அனைத்து இயல்புகளையும் அடைவதற்கு அவர்களுக்குள் குருவாக இருக்கும் இறைவன் சிறப்பான வழிகாட்டுவார். அப்படி சிறப்பான நிலையை அடைந்த பிறகு சாதகர்கள் தங்களின் ஆன்மாவின் ஒளி வழியாக இறைவனின் பேரொளியைப் பார்த்து மனம் ஒன்றி இருந்தால் அவர்களுக்குள் ஆன்ம ஒளியாக இருக்கும் இறைவனே அண்ட சராசரங்கள் எங்கும் பேரொளி ஜோதியாக பரவி நிற்கின்றான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
