பாடல் #1123

பாடல் #1123: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைகொண்ட வேந்திழை யீசன்
கணவனைக் காண வனாதியு மாமே.

விளக்கம்:

பாடல் #1122 இல் உள்ளபடி தன்னை முழுவதுமாக சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்ட இறைவி அவர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக பரவி இருக்கின்றாள். அவளை முழுவதுமாக சரணடைந்தவர்கள் அனைவருக்கும் உண்மைப் பொருளாகவும் முக்தியை அருளுபவளாகவும் அவளே நிற்கின்றாள். எம்மையும் தடுத்து ஆட்கொண்டு தமது அடிமையாக ஆக்கிக் கொண்ட அந்த இறைவியோடு இறைவனையும் அவளது சரிபாதி துணைவனாகக் கொண்டு பார்த்தால் அவனைப் போலவே அவளுக்கும் தொடக்கம் என்று ஒன்று இல்லாதவளாக இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.