பாடல் #1088

பாடல் #1088: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

காரணி மந்திர மோதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரண நந்தி நடுவங் குரைசெய்த
ஆரண வேதநா லந்தமும் ஆமே.

விளக்கம்:

பாடல் #1087 இல் உள்ளபடி முத்தொழில்களுக்கு நன்மை செய்யும் காரணியாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தாமரை மலரின் மேல் அமர்ந்து கொண்டு வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கின்ற பிரம்மாவின் படைத்தல் தொழில், உயிர்கள் அனைத்திற்கும் மூச்சுக்காற்றாக இயங்கிக் கொண்டு அவற்றை காப்பாற்றுகின்ற விஷ்ணுவின் காத்தல் தொழில், உலகத்தில் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நடுநிலையான சாட்சியாக நின்று அவரவர்களின் செயல்களுக்கேற்ப கர்மங்களை அழித்தருளுகின்ற சிவனின் அழித்தல் தொழில் ஆகிய மூன்று தொழில்களாகவும் அந்த தொழில்களால் வகுக்கப்படுகின்ற வேதத்தின் எல்லையாகவும் இருக்கின்றாள்.

குறிப்பு: வேதம் என்பது உலகத்திலுள்ள அனைத்து செயல்களுக்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றது. அவற்றின் எல்லையாக (முடிவில் சென்று சேருகின்ற இடம்) திரிபுரை சக்தி இருப்பதை இந்த பாடலில் அறியலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.