பாடல் #1092

பாடல் #1092: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

காணு மிருதய மந்திர முங்கண்டு
பேணு நமவென்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற வாகுதி
பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.

விளக்கம்:

பாடல் #1091 இல் உள்ளபடி தூய்மையான ஆன்மாவை சாதகர் கண்டு உணர்ந்த பிறகு இருதயத்தில் கேட்கும் இருதய மந்திரத்துடன் ‘நம’ சேர்த்து இறைவனை போற்றி வணங்கினால் மூலாதாரத்திலிருந்து கிளம்பிய அக்னி தலைக்கு மேலே சுழுமுனை நாடியின் உச்சி வரை மிகவும் நீண்டு மாபெரும் அக்னியாக இருக்கும். இதன் பிறகு தலை உச்சிக்கும் அதிலிருந்து சிறிது தூரத்திலிருக்கும் துவாதசாந்த வெளிக்கும் நடுவில் கேட்கும் சிதாகாய மந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: பாடல் #1086 இல் உள்ளபடி மானசீக பூஜையில் இதயத்துடிப்பை மிருதங்கமாக பாவிக்கும் போது கேட்கும் ஒலியே இருதய மந்திரமாகும். மூச்சுக்காற்றை நாதஸ்வரமாகவும் பாவிக்கும் போது தலை உச்சியில் கேட்கும் ஒலியே சிதாகாய மந்திரமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.