பாடல் #1112

பாடல் #1112: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1111 இல் உள்ளபடி எமது உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கலைகளுக்கும் தலைவியாக இருக்கும் வயிரவி தேவியானவள் தனது ஞானக்கண்ணைக் கொண்டு எமது நெற்றிக்குள் ஞானக் கண்ணாக வீற்றிருக்கிறாள். அவள் எமக்குள் இயங்கிக் கொண்டே இருந்து எம்மை சாதகம் செய்ய வைத்து அதன் பயனாக எமது மூலாதாரத்திலிருந்து குண்டலினியை மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கிருந்து அமிர்தத்தை வழங்கி அருளுகின்றாள். அதன் பயனாக ஒலி ஒளியின் தலைவியான அந்த தேவியே எமது ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இருந்த இடத்திலேயே அனைத்தையும் பார்க்க வைத்து அருளுகின்றாள். அதன் பிறகு எமது உடலுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியில் அசைந்து கொண்டே இருந்து ஒரு பூங்கொடி கொம்பை சுற்றிக்கொண்டே மேலெழுவது போல எமது சுழுமுனை நாடியைச் சுற்றிக்கொண்டே எமக்குள் வீற்றிருக்கின்றாள்.

கருத்து: சாதகம் செய்யும் சாதகர்களுக்கு அவர்களின் உடலுக்குள் இருந்து அனைத்து கலைகளையும் இயக்கி அவர்களது சாதகத்தை தொடர்ந்து செய்ய வைப்பது வயிரவி தேவியே என்பதை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.