பாடல் #963

பாடல் #963: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

விளக்கம்:

பாடல் #962 இல் உள்ளபடி ‘ஓம்’ எனும் ஓரெழுத்தாக ஓதி உணரக்கூடியவர்களுக்கு அதன் உயிர்க்கலைகளாக மொத்தம் 15 எழுத்துக்கள் இருப்பதை உணர முடியும். இந்த 15 எழுத்துக்கள் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்து மந்திரமும் அதன் ஆதார எழுத்துக்களாகிய அ, இ, உ, எ, ஒ (பாடல் #927) ஆகிய ஐந்து எழுத்துக்களும் அதன் பீஜங்களாகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் (பாடல் #912) ஆகிய ஐந்து எழுத்துக்களும் ஆகும். இந்த 15 எழுத்துக்களே மாற்றி மாற்றி எழுதப்பட்டு திருவம்பலச் சக்கரத்தில் மொத்தம் 51 எழுத்துக்களாக இருக்கின்றது (பாடல் #924). இந்த 15 எழுத்துக்களில் அ, உ இரண்டும் ஆதி எழுத்துக்களாகும். மீதியுள்ள 13 எழுத்துக்களும் சோதி எழுத்துக்களாகும். இந்த சோதி எழுத்துக்களை பீஜங்களாக்கி அவற்றின் ஒலியை உடலுக்குள் பரவச் செய்து இதன் தத்துவத்தை உணரலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.