பாடல் #1122: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்
தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.
விளக்கம்:
ஆன்மாக்களின் தலைவியானவளும் எல்லாவித நன்மைகளையும் அருளுகின்ற திரு ஆவடு திருத்தலத்தில் (திருவாவடுதுறை) வீற்றிக்கின்றவளும் உயிர்களின் சொல்லிற்குத் தலைவியானவளும் அவளுடைய நன்மைகளைப் புகழ்ந்து போற்றி பாடி வணங்குகின்றவர்களுக்கு செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகிய முக்தியை அருளுகின்றவளும் சதாசிவமூர்த்தியின் சரிபாதியாக இருக்கும் துணைவியானவளும் அனைத்திலும் பரவி இருக்கின்ற அனைத்திற்கும் தலைவியானவளும் ஆகிய வயிரவி தேவியானவள் தம்மை முழுவதுமாக சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்டு அருளினாள்.
குறிப்பு: இத்தலத்தில் தான் திருமூலர் 3000 வருடங்கள் தவமிருந்து திருமந்திரம் பாடல்களை இயற்றினார்.
