பாடல் #1111: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநா ளனைத்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.
விளக்கம்:
பாடல் #1110 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் மகிழ்ச்சியுடன் இருந்த இறைவியானவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நீண்ட காலம் இருந்து குமரியாகி அதன் பிறகு எமது உடல் முழுவதும் சென்று எமக்குள் செயல்படும் கலைகள் அனைத்தையும் எமது தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒன்று சேர்த்து அந்த கலைகள் அனைத்திற்கும் தலைவியாக வீற்றிருந்தாள்.
கருத்து:
உயிர்களின் உடலுக்குள் இருக்கும் கலைகள் என்பது உடலுக்குள் இருக்கும் அனைத்தின் இயக்கமாக இருக்கின்றது. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இறைவனை அடைவதற்கு பயன்படும் வகையில் இயக்குகின்ற தலைவியாக இறைவி இருக்கின்றாள்.
