பாடல் #1105: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
இனியதென் மூலை யிருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிபடு வித்தநன் சார்பு படுத்து
நனிபடு வித்துள்ளம் நாடிநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1104 இல் உள்ளபடி எமது உள்ளத்தையும் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்டு அதில் ஓர் இடத்தில் இளமையோடு எமது உள்ளத்தின் நாயகியாக தான் ஒருவளே வீற்றிருக்கும் வயிரவி தேவி பின்பு எமது உள்ளத்தின் தலைவியாகி இருக்கின்றாள். அதன் பிறகு உலகம் உடல் ஆசை பந்தம் பாசம் ஆகியவற்றின் மேலுள்ள பற்றிலிருந்து எமது உள்ளத்தை பிரித்து தனியாக்கி அதை நன்மையே உருவான இறைவனோடு சேர்ந்து இருக்க வைத்து எமது உள்ளம் முழுவதும் நன்மையே மிகுதியாக இருக்கும் படி செய்து இறைவன் வீற்றிருக்கும் எமது உள்ளத்தையே விரும்பி அங்கே வீற்றிருக்கின்றாள்.
