பாடல் #1096: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1095 இல் உள்ளபடி உரக்க (சத்தமாக) செபித்த சாதகர் தமது மூச்சுக்காற்றுடன் சேர்ந்து ‘சம்’ எனும் மந்திரத்தை உயிருடன் மாயை சேர்ந்து இருக்கும் பாவனையில் தாமாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் வயிரவியானவள் பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள்.
குறிப்பு: மூச்சுக்காற்றுடன் ‘சம்’ மந்திரத்தை சத்தமாக சாதகர் செபிக்கும் போது அதன் உச்ச நிலையில் அவரது உடலோடு இருக்கும் மாயையால் தானாகவே அவரது விரல்கள் விரிந்த சங்கு முத்திரையை பிடிக்கும். இந்த மந்திரத்தை சங்கு முத்திரையுடன் இறைவிக்கு சமர்ப்பணம் செய்தால் இறைவியே சாதகருக்குள் வந்து வீற்றிருப்பாள்.
