பாடல் #665: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறெழுந் தண்கட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
விளக்கம்:
உடம்பில் அடங்கியிருக்கும் மூச்சுக்காற்றை இடகலை, பிங்கலை மூச்சுப்பயிற்சி முறைப்படி பிராணாயாமம் செய்து மாற்றி சுழுமுனை வழியே மேலெழும்புமாறு செய்தால் குளிர்ந்த கடலில் மழை பெய்யும் பொழுது ஏற்படும் கொடி போன்ற மின்னலும் கடலும் சேர்ந்து ஒன்றாகத் தெரிவது போல குண்டலினி சக்தி ஆறு சக்கரங்களைக் கடந்து ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தோடு மனம் ஒடுங்கும்.
கருத்து: பிராணாயாமப் பயிற்சியை முறைப்படி செய்தால் குண்டலினி சக்தி சகஸ்ரதளத்தோடு மனமும் ஒன்றிவிடும்.
