பாடல் #160

பாடல் #160: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

விளக்கம்:

அத்திப்பழத்தையும் (பெண்ணின் உடல்தரும் சுரோணிதம்) நல்ல அரைக்கீரை வித்தையும் (ஆணின் உடல்தரும் சுக்கிலம்) ஒன்றாகக் கலக்கும்படி கொத்தி (ஆணும் பெண்ணும் ஒன்றாக சேருதல்) அதை உலையில் வைத்து (கருப்பை) கூழாக (தூமை எனப்படும் குழந்தையின் சதை உருவம்) சமைத்து வைத்தனர் பெற்றோர். பின்பு அத்திப்பழமாகிய சுரோணிதத்தை அரைக்கீரை வித்தாகிய சுக்கிலம் உண்டு குழந்தையின் உடலாக மாறிவிட்டபின் பிரசவ வேதனையில் கதறி அதைப் பெற்றெடுத்தவர்கள் ஒரு நாள் அந்த உடல் இறந்தபின் அதை எரிக்க சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

கருத்து: சில பொருள்கள் சேர்த்து சாப்பாடு சமைப்பது போலவே ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைத்த இந்த மனித உடல் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைத்ததுபோல ஒரு நாள் உயிர் போனபின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டுவிடும். நன்றாக சமைத்த சாப்பாடும் நிரந்தரமாக பசியைப் போக்காதது போலவே உடலும் நிரந்தரமாக இருக்காது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.