பாடல் #143

பாடல் #143: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தரும் இறக்கின்ற வாறே.

விளக்கம்:

உயிர்களின் உடல் குயவன் செய்யும் மண் பாத்திரம் போன்றது. குயவன் பல பாத்திரங்கள் செய்தாலும் அவன் பயன்படுத்தும் மண் எதுவென்று பார்த்தால் அது களிமண் ஒன்றுதான். அதுபோலவே உயிர்களின் உடல் பலவகைப் பட்டதானாலும் ஆன்மா ஒன்றுதான். குயவன் செய்யும் மண் பாத்திரங்கள் ஒரே மண்ணில் செய்யப்பட்டாலும் இரண்டு வகையாக இருக்கின்றன. ஒன்று தீயினால் சுட்டப்பட்டு திண்ணென்று இருக்கும் பாத்திரம். இரண்டாவது தீயினால் சுடப்படாமல் பச்சை மண்ணாக இருக்கும் பாத்திரம். உயிர்களும் இருவகை உடல்களைத் தாங்கியே உலகிற்கு வருகின்றன. உயிர்களின் உடலோடு அவை செய்த தீவினைகளும் சேர்ந்தே இருக்கின்றன. எப்படி வானிலிருந்து மழை பெய்தால் சுடப்படாத பச்சை மண்ணாலான பாத்திரங்கள் கரைந்து மறுபடியும் களிமண்ணாகவே மாறிவிடுமோ அதுபோலவே உயிர்கள் இறைவனின் மேல் நாட்டமில்லாமல் தங்களின் தீவினைகளிலேயே கட்டுண்டு பச்சை மண்ணாகவே இருந்து ஒரு நாள் அழிந்து போகின்றன. இப்படி உலக வாழ்க்கை வாழ்ந்து இறந்து போகும் மனிதர்கள் எண்ணிலடங்காதவர்கள். எனவே நிலையில்லாத உடலின் மேல் நாட்டம் வைக்காமல் என்றும் நிலையான இறைவனின் மேல் நாட்டம் வைக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.