பாடல் #158

பாடல் #158: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.

விளக்கம்:

இந்த உலகம் முழுவதும் பிறக்கின்ற உயிர்களின் உடல்கள் எல்லாம் அழகாக செய்யப்பட்ட மண்குடம் போன்றது. தாயின் வளமை பொருந்திய இடையின் முன்பிருக்கும் வயிற்றிலிருக்கும் குளமாகிய கருப்பைக்குள் சுரோணிதமாகிய மண் மற்றும் சுக்கிலமாகிய நீர் கலந்து குயவனாகிய இறைவனால் படைந்த உடல் இது. மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்து போனால் கூட ஓடாக பயன்படும் என்று வைத்திருக்கும் மனிதர்கள் தோலாகிய மண்ணால் செய்யப்பட்ட இந்த உடலாகிய குடம் உடைந்து போனால் (இறந்து போனால்) மட்டும் வைத்திருக்காமல் வெளியே எடுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துவிடுவார்கள்.

கருத்து: களிமண்ணால் செய்யப்பட்ட உடைந்த குடத்திற்கு இருக்கும் மதிப்பு கூட உயிர்பிரிந்த உடலுக்கு கிடையாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.