பாடல் #157

பாடல் #157: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலைப் போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலையில் மூழ்குவர் நீதியில் லாரே.

விளக்கம்:

ஒருவன் இறந்தபின் அவனது உடலைச் சுற்றி நின்று கூவி ஒப்பாரி வைக்கும் உறவினர்களும் சுற்றத்தாரும் மனைவியும் மக்களும் அவனது உடலை ஊரின் எல்லை சுடுகாடு வரை எடுத்துச் சென்றபின் தங்களின் நெற்றியின் மேல் அரும்பிவிட்ட வேர்வையை துடைத்து நீக்குவது போல் அவனது உடலையும் இறக்கி வைத்து விறகுகளை அடுக்கி அதற்கு நெருப்பு மூட்டிவிட்டு நீரினில் தலை முழுகி விட்டுச் சென்று விடுபவர்கள். தனக்கு உறுதிணையாய் இருந்த அவனது உடலையும் அவனது அன்பையும் அப்போதே மறந்துவிட்ட நீதியில்லாதவர்கள் இவர்கள்.

கருத்து: ஒருவன் இருக்கும் வரை அவன் மூலம் கிடைத்த அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அவனோடு அன்பாக இருந்தவர்கள் அவன் இறந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டும் தங்களுக்கும் ஒரு நாள் இறப்பு வரும் என்பதை நினைத்துப் பார்க்காதவர்கள் நீதியில்லாதவர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.