பாடல் #1154

பாடல் #1154: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அதுஇது வென்பா ரவளை யறியார்
கதிவர நின்றதோர் காரணங் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது வுன்னார்கள் தேர்ந்தறி யாரே.

விளக்கம்:

இறைவி இதுவாக இருக்கிறாள் அதுவாக இருக்கிறாள் என்று சொல்பவர்கள் இறைவியை பற்றி எதுவும் அறியாமல் இருக்கிறார்கள். இறைவியாக இருக்கும் முக்தியை அடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நிற்பதற்கு ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். பேரின்ப மயக்கத்தை கொடுக்கும் வாசனை மிக்க மலர்களைத் தன் கூந்தலில் சூடியிருக்கும் மாபெரும் தெய்வமாகிய இறைவி இறைவனுடன் சேர்ந்து பூரண சக்தியாக இருக்கும் மாபெரும் நிலையை எண்ணிப் பார்க்காமலும் அதைத் தமக்குள்ளேயே ஆரய்ந்து அறிந்து கொள்ளாமலும் இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.