பாடல் #1144

பாடல் #1144: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அடுக்குந் தாமரை யாதி யிருப்பிடம்
எடுக்கும் தாமரை யில்லகத் துள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.

விளக்கம்:

பாடல் #1143 இல் உள்ளபடி ஒன்பது விதமான சக்திகளும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கு ஆதார சக்தியாக இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் இறைவனின் இருப்பிடமாகும். உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கும் அமிழ்தம் சாதகரின் உடலுக்குள்ளிருந்து ஊறிக்கொண்டே இருக்கின்றது. உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற இந்த சக்தியினால் சாதகருக்கு தாமே இயக்குகின்றோம் என்கிற அகங்காரம் வந்துவிடாமல் நெற்றியின் உச்சியில் இருந்து சகஸ்ரதள சக்தி தடுத்துக் காக்கின்றது. சாதகரின் உடலை இயக்கத் தேவைப்படுகின்ற சக்தியை மூலாதாரம் சகஸ்ரதளத்திலிருந்து சிறிதளவு எடுத்து கொள்கிறது.

கருத்து:

சாதகரின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் இறைவன் ஜோதி வடிவமாக இருந்து உலகங்கள் இயங்குவதின் காரணமாக இருக்கின்றார். இதனால் சாதகருக்கு தாமே இயக்குகின்றோம் என்கிற அகங்காரம் வந்துவிடாமல் இருக்க நெற்றியின் உச்சியிலிருந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவன் தடுத்து காப்பாற்றுகின்றார். சாதகரின் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை சகஸ்ரதளத்திலிருந்து ஊறும் அமிழ்தத்தில் சிறிதளவு மூலாதாரத்திற்கு கொடுத்து இயங்க வைக்கின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.