பாடல் #1134: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
இரவும் பகலு மிலாத விடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாம லருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனு மாமே.
விளக்கம்:
காலை மாலை என்று வரையறுக்கப்பட்ட காலங்கள் இல்லாமல் எந்தக் காலத்திலும் நமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற நறுமணம் கமழ்கின்ற அழகிய கூந்தலை உடைய இறைவியைத் தமக்குள்ளேயே தேடி அடைந்து அவளுடைய திருவருளைத் தவிர வேறு எந்த எண்ணத்தாலும் சிறிதும் அசைந்து விடாத மனநிலையில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்கள் எப்போதும் மாறாமல் இருக்கும் உடலைப் பெற்று என்றும் இளமையுடனே இருப்பார்கள்.
குறிப்பு:
பாடல் #1133 இல் உள்ளபடி சித்தத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் எப்படி வீற்றிருக்கின்றாள் அவளை எப்படி அடைந்து அவளை மட்டுமே எண்ணி இருந்து அழியாத உடலை எப்படி பெறலாம் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம்.
