பாடல் #147

பாடல் #147: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலியாகக் காட்டிய வாறே.

விளக்கம்:

மனிதர்களின் இந்த உடலானது நோய்கள் செய்த வினைகள் எல்லாம் முடிந்து போனபின் ஒரு நாள் முதுமை பெற்று நாடி நரம்புகள் செயலிழந்து எலும்புகள் பழுத்துத் தளர்ந்துபோக இறந்து போய்விடும். இறந்து போனபின் மற்றவர்கள் வந்து அந்த உடலின் மூக்கின் மேல் கைவைத்து மூச்சிருக்கின்றதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு மூச்சில்லை என்பது உறுதியானவுடன் துணியால் உடலை மூடி அதைக் கொண்டு போய் சுடுகாட்டில் வைத்து சடங்குகளைச் செய்தபின் புதைத்துவிட்டு (அல்லது எரித்துவிட்டு) திவசம் செய்யும்போது காகங்களுக்குச் சாதம் வைத்து அது இறந்தவர்களுக்குச் சென்று சேரும் என்று எண்ணி செய்கிறார்கள் மூடர்கள். இறந்தவர்களின் உயிரும் அங்கேயே இருப்பதில்லை இவர்கள் காகத்திற்கு வைக்கும் சாதமும் அவர்களால் உட்கொள்ளப் படுவதில்லை. இறந்தபின் மதிப்பில்லாத இந்த உடலின் மேல் நாட்டம் கொள்ளாமல் என்றும் நிலைத்திருக்கும் இறைவன் மேல் நாட்டம் கொள்ளுவது நல்லது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.