பாடல் #165

பாடல் #165: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மடல்விரிக் கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்படந் தேழா நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

விளக்கம்:

மடல் விரித்த அழகிய கொன்றை மலரை மார்பில் அணிந்த மாயவனால் (இறைவன்) மாயையில் படைக்கப்பட்ட இந்த மனித உடலும் அதிலிருக்கும் உயிரும் அந்த இறைவனின் திரு உருவத்தைத் வழிபடாமல் ஆசைகளின் வழியே வாழ்ந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் நெருக்கமானவர்கள் (மனைவி மக்கள் மற்றும் உறவினர்) அடிவயிற்றிலிருந்து உரக்கக் கூப்பிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்க நரகிலேயே கொடியதான ஏழாவது நரகத்தில் கிடந்து அல்லல் படுவார்கள்.

கருத்து: அழியக்கூடிய இந்த உடலின் மேல் ஆசை வைத்து உலகில் ஆசையினால் பல தீய காரியங்களைச் செய்துகொண்டு தம்மைப் படைத்தவனும் என்றும் அழியாதவனும் ஆகிய இறைவனைப் போற்றி வணங்காதவர்கள் இறந்தபின் அவர்களின் உறவினர்கள் கதறி அழுது கூப்பிட்டாலும் திரும்பி வரமுடியாமல் ஏழாவது நரகத்தில் கிடந்து துன்பப்படுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.