பாடல் #479

பாடல் #479: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை
பாய்ந்திடும் யோகியர்க்குப் பாய்ச்சலும் ஆமே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து சுக்கிலம் வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு ஐந்து வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை நூறு ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை எண்பது ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். எந்த அளவு மூச்சுக்காற்று வெளிவருகின்றது என்பதை பிரித்துப் பார்த்து அறிந்து கொண்டு தமக்கு வேண்டிய அளவிற்கு வெளிவரும் படி செய்வது யோக சாதனைகளைப் புரிந்து சாதனைகள் கைவரப்பெற்ற யோகியர்களுக்கே முடியும் என்பதால் அவர்களுக்கு ஆயுள் அளவு கிடையாது.

குறிப்பு :மூச்சுக்காற்றைத் தம் வசம் பழக்கி அளவு அறிந்து இழுத்து அளவு அறிந்து வெளிவிடும் ஆற்றலைப் பெற்றவர்கள் யோகியர்கள். அவர்களால் தாம் வெளிவிடும் மூச்சுக்காற்றின் நேர அளவைக் கூட்டி தங்களது ஆயுளை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்க முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.