பாடல் #459

பாடல் #459: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

விளக்கம்:

எத்தனையோ பிறவிகளை எடுத்து முடிந்த பின் எடுத்த இந்த பிறவியில் வினைப் பயனால் ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் கலந்து அவர்களது உருவங்களிலிருந்தும் அவர்களின் முன்னோர்களது உருவங்களிலிருந்தும் பலவிதமான அம்சங்களை எடுத்துக் கொண்டு அந்த அம்சங்களின் சாயலிலேயே உருவம் கொண்டு கரு உருவாகின்றது. ஆணும் பெண்ணும் இன்பத்தில் கலந்து பின் பெண்ணிடம் உருவான அந்தக்கரு புதிதாக உருவானதாக அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்டாலும் அந்தக் கரு உருவாகுவதற்கு முன்பே இந்த ஆணுக்கும் இந்த பெண்ணுக்கும் தான் இந்தக் கரு உருவாக வேண்டும் என்பது வினைப் பயனால் முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பதை உணராத ஆணும் பெண்ணும் மாயையில் ஒருவரோடு ஒருவர் கலந்து கரு உருவாகக் காரணமாகி அந்தக் கருவுக்கும் தங்களது மாயையோடு சேர்த்து தங்களது பலவித குணங்களையும் கொடுத்து விடுகின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.