பாடல் #457

பாடல் #457: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விரட்டானெனிற் பன்றியு மாமே.

விளக்கம்:

கரு உருவாகும் போது அதனுடன் போகின்ற எட்டுவிதமான சூட்சும உருவங்களும் பத்துவிதமான வாயுக்களும் எட்டுவிதமான குணங்களும் இவற்றில் மூழ்கி இருக்கின்ற ஆன்மாவும் அது உயிராக உடலெடுக்கும் போது உருவாகும் ஒன்பது வாயில்களும் உடலின் மூலாதாரத்தில் இருக்கும் நாகமாகிய குண்டலினியும் பன்னிரண்டு அங்குலம் (கழுத்துக்குக் கீழே எட்டு அங்குலம் மனிதர்களுக்கும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம் யோகிகளுக்கும்) ஓடிக் கொண்டிருக்கும் மூச்சுக் காற்றும் இவை அனைத்தையும் அடக்கி ஆளும் இறைவன் தனது அருளால் பாதுகாத்து வழி நடத்தாமல் இருந்தால் கருவில் பிறக்கும் குழந்தை இழி பிறப்பாக போய் விடும்.

சூட்சும உருவங்கள் 8 – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், புத்தி, மனம், அகங்காரம்.
வாயுங்கள் 10 – பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்.
குணங்கள் 8 – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், துன்பம், அகங்காரம்.
உடலின் வாயில்கள் 9 – 2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத் துவாரங்கள், வாய், நீர்வாய், ஆசனவாய்.

உட்கருத்து: கருவைப் பாதுகாத்து அதற்கு வேண்டிய அனைத்தையும் செயல்படுத்துபவன் இறைவன். அப்படி அவன் செயல்படுத்தாமல் விட்டுவிட்டால் பிறக்கும் குழந்தை எதற்கும் உபயோகமில்லாத சதைப் பிண்டமாகப் பிறக்கும்.

2 thoughts on “பாடல் #457

Leave a Reply to Ezhil SouparamnianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.