பாடல் #261

பாடல் #261: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயிக்
கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

விளக்கம்:

காலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஓடிய காலங்கள் பல யுகங்களாக மாறி ஊழிக்காலத்தில் அழிந்தும் போகின்றது. உயிர்கள் தம் கற்பனையில் கட்டிய மனக்கோட்டைகளும் அவை வாழும் நாட்களும் குறைந்துகொண்டே சென்று கடைசியில் பெரிய துயரத்தையே தரும் உடலானது சக்கையாகப் பிழிந்து எடுக்கப்பட்டது போல வயதாகிச் சுருங்கிப் போய் ஒரு நாள் முழுவதுமாக அழிந்தும் போகின்றது. இதையெல்லாம் கண்கூடாக தினமும் பார்தாலும் தங்கள் வாழ்க்கையும் அழிந்து போய்விடும் என்பதை அறியாமல் வாழும் நாட்களில் செய்ய வேண்டிய தான தருமங்களை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக வாழ்ந்து அழிந்து போகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.