பாடல் #1290: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
கொண்டவிம் மந்திரங் கூத்த னெழுத்ததாய்ப்
பண்டையுன் னாவிப் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்று மிதயத் தெழுந்து நமவெனே.
விளக்கம்:
பாடல் #1289 இல் உள்ளபடி சாதகர் முழுவதுமாக உள் வாங்கிக் கொண்ட மந்திரமானது இறைவனின் அம்சமாக உலக இயக்கத்தை செய்து கொண்டே இருக்கும் ஆதி எழுத்தான ஓங்காரமாகவே மாறிவிடுகின்றது. இந்த மந்திரத்தை அன்னாக்கில் வைத்து சிறிதளவு கூட மாறுபாடு இல்லாமல் அசபையாக உச்சரித்துக் கொண்டே இருந்தால் தலை உச்சியில் இருக்கின்ற சிற்றம்பலமாகிய சகஸ்ரதளத்திலிருந்து அண்ட சராசரங்கள் முழுவதும் நிறைந்து பிரகாசிக்கும் பேரொளியாக மாறி உலக இயக்கத்திற்கான நன்மையை செய்து கொண்டிருக்கும். அதனால் மந்திரத்திலேயே இலயித்துக் கொண்டு இருக்கும் இதயத்திலிருந்து பிரிந்து நின்று இறைவனை எப்போதும் ‘நம’ என்று போற்றி வணங்கிக் கொண்டே சாதகர் இருப்பார்.
