பாடல் #1285

பாடல் #1285: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்
மாறியல் பாக வமைந்து விரிந்திடுந்
தேறிய வஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1284 இல் உள்ளபடி சக்தி மயங்களை நன்கு உணர்ந்து தெளிந்த சாதகர்கள் எடுத்துக் கூறிய ஏரொளிச் சக்கரத்தின் உள்ளிருந்து மேலெழுந்து வருகின்ற மந்திரமானது ஆறு விதமான இயல்புகளைக் கொண்டு ஒரு தன்மையில் சக்கரமாக அமைந்து அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவுகின்றது. அதனுடைய இயல்பிற்கு சரிசமமான நிலையை அடைகின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்றாகச் சேர்ந்து எழுகின்ற போது இயல்பிலேயே அழியக்கூடிய தன்மையைக் கொண்ட சாதகரின் உடலானது அவர் இந்த சாதகத்தை இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கின்ற போது தனது தன்மையில் இருந்து மாறி என்றும் அழியாத இயல்பைப் பெறுகின்றது.

கருத்து: சாதகர்கள் ஏரொளிச் சக்கரத்தின் சாதகத்தை இடைவிடாமல் செய்வதன் மூலம் எவ்வாறு என்றும் அழியாத உடலைப் பெறுகின்றார் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.