பாடல் #1289

பாடல் #1289: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்ததாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

விளக்கம்:

பாடல் #1288 இல் உள்ளபடி சாதகர் செய்கின்ற சாதகத்தின் அமைப்பிலிருந்து எழுகின்ற மந்திரமானது கால் பங்கு, அரைப் பங்கு, முக்கால் பங்கு, முழுப் பங்கு என்ற வெவ்வேறு அளவுகளில் வேறுபட்டு எழுந்து வரும். இப்படி வந்த மந்திரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒரே மந்திரமாக சாதகருக்குள் முழுவதும் ஊறி எழுகின்றது. இந்த மந்திரமானது சாதகரின் உடலையும் தாண்டி வெளியே வந்து அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களுக்கும் விரிந்து பரவி நின்று அந்த உலகங்களில் இறைவனை அடைய வேண்டும் என்று சாதகம் செய்கின்ற உயிர்களுக்கெல்லாம் பிறைவியை அறுத்து அருள் பாலிக்கின்றது. தமக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற மந்திரத்திலேயே இலயித்து தாமும் மந்திரமாகவே மாறி மந்திரத்தை தமக்குள் முழுவதுமாக உள் வாங்கிக் கொண்ட சாதகர்களே இந்த நிலையை அடைவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.