பாடல் #1275

பாடல் #1275: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

நின்றது வண்டமு நீளும் புவியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்
நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

விளக்கம்:

பாடல் #1274 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி உலகத்திலுள்ள ஐந்து பூதங்களோடும் ஒளியாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து அதிலுள்ள அனைத்து உலகங்களுக்கும் பரவி நிற்கின்றது. இந்த ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி நின்று அனைத்தையும் தாங்கி நிற்பது எப்படி என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது சாதகருக்குள்ளிருக்கும் மூலாதாரத்திலிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்தை சார்ந்தே இருக்கின்றது. இப்படி அண்ட சராசரங்கள் முழுவதும் தாங்கி நிற்கின்ற சக்தியைக் கொடுப்பது சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சமே ஆகும்.

குறிப்பு: இறை சக்தியின் மூலம் நேரடியாக வராமல் சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து மட்டுமே வெளிச்சமாகவும் சத்தமாகவும் வெளிப்படுவதால் ஏரொளிச் சக்கரத்தை இங்கே மூல மலம் என்று குறிப்பிட்டு அருளுகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.