பாடல் #129: முதல் தந்திரம் – 1. உபதேசம்
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வது எவ்வாறே.
விளக்கம்:
பாடல் #128 ல் உள்ளபடி சமாதி நிலையில் இருக்கும் சித்தர்கள் அனைத்து உலகங்களும் சிவமாய் இருப்பதை தமக்குள்ளே தரிசித்துக்கொண்டார்கள். அப்படியே இருந்துதான் சிவனை விட்டுப் பிரியாது சிவனோடு கலந்து நிற்கும் சிவயோகமும் தம்முள்ளே கண்டார்கள் அப்படியே இருந்துதான் சிவபோகமான பேரானந்த நிலையையும் தமக்குள்ளே கண்டார்கள். அப்படி அவர்கள் இருக்கும் நிலையை யாம் வெறும் வார்த்தைகளால் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே அறிய முடியும்.
