பாடல் #125

பாடல் #125: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத்து ஆறே.

விளக்கம்:

சித்தர்கள் என்பவர்கள் சிவ உலகத்தை இறைவனின் அருளால் மண்ணுலகிலேயே தரிசித்தவர்களாகவும் ஓசையும் அவ்வோசையின் முடிவில் இருக்கும் அமைதியையும் பேரானந்தத்தையும் தமக்குள்ளே உணர்ந்தவர்களாகவும் என்றும் அழிவில்லாதவர்களாகவும் மும்மல அழுக்குகள் இல்லாதவர்களாகவும் உலகப் பற்றுக்கள் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் உடம்புடன் இருக்கும்போதே இறைவனின் அருளால் முக்திபெற்றவர்கள். இவர்கள் பெற்ற முக்திக்கு முழுமுதல் காரணமாக இருந்தது முப்பத்து ஆறு தத்துவங்களே ஆகும். இவை ஆன்ம தத்துவம் இருபத்தி நான்கும் (ஆன்ம ஞானம்) வித்தியா தத்துவம் ஏழும் (கலை/அறிவு ஞானம்) சிவ தத்துவம் ஐந்தும் (பரம்பொருள் ஞானம்) ஆக மொத்தம் முப்பத்து ஆறு தத்துவங்கள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.