பாடல் #1286: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
மதித்திடு மம்மையு மாமாது மாகும்
மதித்திடு மம்மையு மங்கன லொக்கும்
மதித்தங் கெழுந்தவை காரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.
விளக்கம்:
பாடல் #1285 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திற்கான சாதகத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்ற சாதகர்களின் உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியே அண்ட சராசரங்களில் இருக்கின்ற பராசக்தியாகவும் இருக்கின்றது. இந்த சக்தியே சாதகர்களுக்குள் இருக்கின்ற மூலாக்கினிக்கு சரிசமமாக இருக்கின்றது. அதனால் சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்த ஏரொளிச் சக்கரம், பாடல் #1285 இல் உள்ளபடி ஐந்து பூதங்கள், பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்களுக்கும் விரிவடைகின்ற மந்திர ஒலிகள் போன்ற அனைத்திற்கும் இந்த சக்தியே மூல காரணமாகவும் இருக்கின்றது. அதனால் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்ற மூலாக்கினியும் வீறு கொண்டு எழுந்து மூலாதாரத்திலிருந்து மேலேறி வருகின்ற அனைத்தினாலும் சாதகரின் உடலுக்கும் உலகத்திற்குமான தொடர்புகளை அறுப்பதாகவும் அதுவே இருக்கின்றது.
