பாடல் #1055

பாடல் #1055: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தானெங் குளனங் குளதையன் மாதேவி
ஊனெங் குளவங் குளவுயிர்க் காவலன்
வானெங் குளவங் குளமந்த மாருதங்
கோனெங்கு நின்ற குறிபல பாரே.

விளக்கம்:

இறைவன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெங்கெல்லாம் மாபெரும் தேவியாகிய இறைவியும் இறைவனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றாள். உலகத்தில் உடலாக இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்திற்குள்ளும் உயிராக நின்று இறைவனும் இறைவியும் பாதுகாக்கின்றார்கள். உலகத்தில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மென்மையான தென்றல் காற்றாக இறைவனும் இறைவியும் இருக்கின்றார்கள். அனைத்தையும் ஆளுகின்ற இறைவனும் இறைவியும் எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பலவிதமான குறிப்புகள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்து: உலகத்திலுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா பொருள்களும் ஏதோவொரு வகையில் உருமாறுகிறது. இந்த குறிப்பே இறை சக்தி அங்கே இருக்கின்றது என்பதற்கு சான்றாகும்.

பாடல் #1056

பாடல் #1056: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

விளக்கம்:

பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அந்தந்த செயல்களுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள். பராசக்தியின் இந்த தன்மையை உயிர்கள் உணராமல் இருக்கின்றார்கள். இந்தப் பராசக்தியே யுகம் யுகமாக தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள். திரிபுரையாகிய இந்த பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.

பாடல் #1057

பாடல் #1057: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

விளக்கம்:

பாடல் #1056 இல் உள்ளபடி இன்பத்தை அனுபவிக்கின்ற உயிர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுடன் சேர்ந்து பின்னிப் பிணைந்து இருக்கும் சடை முடியைப் போல நிற்கின்றாள் பராசக்தி. இந்தப் பராசக்தியை தினந்தோறும் தியானித்து சாதகம் செய்யும் அடியவர்களுக்கு அவர்கள் செய்த சாதகத்தின் பலனாக கொடி போல வளர்கின்ற ஞானத்தைக் கொடுத்து அந்த கொடியில் சரிபாதியாக நின்று அதைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாகவும் இருக்கின்றாள்.

பாடல் #1058

பாடல் #1058: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பியென் னுள்ளே நயந்துவைத் தேனே.

விளக்கம்:

பாடல் #1057 இல் உள்ளபடி ஞானத்தை தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளை கொண்டவளும், மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பி தேடுகின்றவளாக இருப்பவளும், பவளம் போன்ற சிகப்பான மேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய திரிபுரை சக்தி இராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள். இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்த சக்தியே என்று நம்பி எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.

கருத்து:

திரிபுரை சக்தியானது இராஜராஜேஸ்வரி எனும் பெயருடன் தேவர்களுக்கும் அமிர்தத்தை அருளி ஞானத்தை வளர்ப்பவளாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். கொம்பை போன்றவள் என்பது ஞானம் என்கிற கொடியைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாக இருப்பதைக் குறிக்கின்றது. முழுமையான அழகுடன் விளங்கும் கொங்கைகள் என்பது தேவர்களுக்கும் அமிர்தமான பாலை தருபவளாக இருப்பதைக் குறிக்கின்றது. மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை சூடியுள்ளவள் என்பது வண்டு தேனைத் தேடி வாசனையுள்ள மலரை நோக்கிச் செல்வதைப் போல தேவர்கள் இறைவனேடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை தேடிப் பெறுவதற்கு இராஜராஜேஸ்வரியை நாடிச் செல்வதைக் குறிக்கின்றது. செம்பவளத் திருமேனியைக் கொண்ட சிறுமி என்பது உச்ச நிலை ஞானத்தின் ஆரம்பத்தைக் கொடுத்து அருளும் இராஜராஜேஸ்வரியின் திருவுருவத்தைக் குறிக்கின்றது.

பாடல் #1059

பாடல் #1059: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிர்களும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவர்களுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள். தானாக செயல்படும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அசையா சக்தியான சதாசிவமூர்த்தியும் அதனை செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள். இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். உலகத்திலுள்ள உயிர்கள் முதற்கொண்டு அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்துமே தமது ஆயுளில் பலவிதமாக தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதற்கான அறிவை கொடுக்கும் தலைவியாக ஸ்ரீவித்யா தேவி இருக்கின்றாள்.

பாடல் #1060

பாடல் #1060: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து அனைத்து உயிர்களுக்கும் அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள். இந்த சக்தியானவள் என்றும் மாறாதவளாக அனைத்து செயல்களையும் செய்வதற்கு தேவையான ஞானத்தை அருளி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள். திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்துக்குள்ளே வைத்து நிலை நிறுத்தியதால் அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.

கருத்து: அனைத்து செயல்களையும் செய்யும் ஞானத்தை வழங்குகின்ற திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா தேவி எனும் பெயருடன் உயிர்களுக்குள்ளே என்றும் மாறாமல் நிலைபெற்று நின்று அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற அறிவைக் கொடுப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1061

பாடல் #1061: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றெ னகம்படிந் தேழுல குந்தொழ
மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி
ஒன்றெனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே.

விளக்கம்:

பாடல் #1060 இல் உள்ளபடி எனக்குள் நிறைந்து நின்ற திரிபுரை சக்தி தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு அனைத்து செயல்களோடு கலந்து எனது உள்ளத்தில் பதிந்து இருக்கின்றாள். ஏழு உலகத்திலும் அவளை உணர்ந்தவர்கள் வந்து தொழுகின்றபடி எனது மனமாகிய அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனோடு ஒன்றி மனோன்மணி எனும் பெயருடன் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். சிவம் வேறு திரிபுரை சக்தி வேறு என்று வேறுபடாமல் ஒன்றோடு ஒன்றாக ஒன்றி நின்று எப்போதும் பிரியாமல் எனது உள்ளத்துள் ஒன்றாக அடைந்திருக்கின்றாள்.

குறிப்பு: இறைவன் ஆடுகின்ற அனைத்து இடங்களும் (அடியவர்களின் உள்ளம் உட்பட) அம்பலம் என்று அறியப்படும். இறைவனோடு திரிபுரை சக்தி ஒன்றாகக் கலந்து நிற்பதை மனோன்மணி என்ற பெயரில் அறியலாம்.

பாடல் #1062

பாடல் #1062: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

விளக்கம்:

பாடல் #1061 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் ஒன்றாக அடைந்திருக்கும் மனோன்மணி சக்தியானவள் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு முடிவில்லாமல் அனைத்து செயல்களையும் செய்து கொண்டே இருக்கின்றாள். அப்படி அவள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மிகப்பெரும் தலைவனாகிய இறைவனோடு சேர்ந்து எப்போதும் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் மனோன்மணியானவள் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். இவளை தனது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் உயிர்கள் இருக்கின்றார்கள்.

பாடல் #1063

பாடல் #1063: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

உணர்ந்துட னேநிற்கு முள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.

விளக்கம்:

பாடல் #1062 இல் உள்ளபடி திரிபுரையாக இருக்கும் மனோன்மணி சக்தியை தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் அவ்வழியிலேயே சாதகம் செய்யும் போது இறைவன் அவர்களுக்கு உள்ளிருந்து ஒளியாக வெளிப்படுவான். அந்த இறைவனோடு நறுமணம் கமழும் மலர்களை தன் கூந்தலில் அணிந்து இருக்கும் இறைவியும் ஒன்றாகக் கலந்திருந்து வெளிப்படுவாள். அப்படி வெளிப்பட்ட திரிபுரை சக்தி காட்டும் வழியில் அன்போடு செல்பவர்களுக்கு அவள் நற்கதியை அருளுவாள்.

பாடல் #1064

பாடல் #1064: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அளியொத்த பெண்பிள்ளை யானந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

விளக்கம்:

பாடல் #1063 இல் உள்ளபடி நற்கதியை அருளுகின்ற திரிபுரை சக்தியான இறைவி பேரானந்தத்தின் வடிவமாகப் பேரழகுடன் இருக்கின்றாள். புளியம் பழத்தின் மேல்பகுதி கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் பழுத்த பழம் மென்மையாகவும் ஓடுடன் ஒட்டாமலும் இருப்பது போல திரிபுரை சக்தி தனது அருள் பார்வையால் எமது உள்ளத்திற்குள் பார்த்து எம்மை தெளிய வைத்து எமக்குள் ஒளியாக இருக்கும் இறைவனின் சிவகதியை காட்டி எம்மை மேன்மை அடைய வைத்து தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.