பாடல் #1050

பாடல் #1050: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

விளக்கம்:

பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும், வில்லைப் போன்ற வளைந்த புருவங்களையும், அரக்கு நிறத்தில் இருக்கும் திருமேனியையும், சிவமணி மாலையை ஆரமாகவும், தலையில் ஒளிர் விடும் நிலாவை கிரீடமாகவும் கொண்டு சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்றவள் திரிபுரை சக்தியாகும்.

கருத்து:

திரிபுரை சக்தியானது சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். பாடல் #1049 இல் உள்ளபடி காதுகளில் அணிந்த குண்டலங்கள் சூரிய சந்திரனைக் குறிக்கின்றது. கொலை செய்யும் வில்லைப் போன்ற வளைந்த புருவங்கள் அழிப்பதைக் குறிக்கின்றது. கழுத்திலிருக்கும் சிவமணி மாலை உலகத்தைச் சுற்றி நிற்கும் நவகிரகங்களைக் குறிக்கின்றது. நிலவிலிருந்து வரும் குளிர்ந்த ஒளி போன்ற தலைமுடி உலகங்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து பாதுகாப்பதை குறிக்கின்றது. அரக்கு நிற திருமேனி எப்போதும் நில்லாமல் அசைந்து கொண்டே இருக்கின்ற சக்தியின் வேகத்தை குறிக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.