பாடல் #1046

பாடல் #1046: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்
திருள்புரை யீசி மனோன்மனி யென்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

விளக்கம்:

பாடல் #1045 இல் உள்ளபடி உருவமாகவும் உருவம் இல்லாததாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தி சுந்தரி, அந்தரி, சிந்து, நாரணி, மனோன்மனி ஆகிய ஐந்து பெயர்களைக் கொண்ட தேவியர்களாக இருந்து சக்தியளிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.

ஐந்து தேவியர்கள்:

சுந்தரி – பேரழகு உடைய வெள்ளை நிறத்தைக் கொண்டவள் (சரஸ்வதி)
அந்தரி – வானம் போன்ற செம்மையான கருமை நிறத்தைக் கொண்டவள் (பார்வதி)
சிந்துப் பரிபுரை – செந்தூரம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்டவள் (மகேஸ்வரி)
நாரணி – நாராயணனுக்கு தேவியாகிய நீல நிறத்தைக் கொண்டவள் (லட்சுமி)
இருள்புரை ஈசி மனோன்மனி – அண்டத்து இருளைப் போன்ற கருமை நிறத்தைக் கொண்டவள் (மனோன்மனி)

குறிப்பு: பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு சக்தியாக சரஸ்வதியும், திருமாலின் காக்கும் தொழிலுக்கு சக்தியாக லட்சுமியும், உருத்திரனின் அழிக்கும் தொழிலுக்கு சக்தியாக பார்வதியும், மகேஸ்வரனின் மறைத்தல் தொழிலுக்கு சக்தியாக மகேஸ்வரியும், சதாசிவனின் அருளல் தொழிலுக்கு சக்தியாக மனோன்மனியும் இருக்கிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.