பாடல் #1069

பாடல் #1069: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஆதி விதமிகுத் தண்டந்த மாலங்கை
நீதி மலரின்மே னேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேற்
சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

விளக்கம்:

ஆதியாக இருக்கும் திரிபுரை சக்தி பல விதங்களில் நிறைந்து இருக்கும் அண்டத்திலுள்ள அனைத்தையும் காத்து அருளுகின்ற திருமாலின் தங்கை என்று அழைக்கப்படுகின்ற பார்வதி தேவி அடியவர்களின் மனசாட்சியாக இருக்கும் நெஞ்சத் தாமரையில் அமர்ந்திருக்கிறாள். அவளின் திருநாம மந்திரத்தை அந்தத் தாமரைக்கு நடுவில் மானசீகமாக வைத்து அந்த மந்திரத்தை செபித்து வரும் அடியவர்களின் உள்ளொளி பெருகி முக்கால ஞானமும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.

குறிப்பு: திரிபுரை சக்தியாக இருக்கும் பார்வதி தேவியை வழிபடுபவர்கள் தங்களது குருவின் மூலம் அவளின் திருநாம மந்திரத்தை மந்திர தீட்சையாகப் பெற்று செபிக்க வேண்டும். அவ்வாறு செபிப்பவர்களுக்கு மூன்று காலங்களிலும் நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஞானம் கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.