பாடல் #1053

பாடல் #1053: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

விளக்கம்:

திரிபுரை சக்தியைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. திரிபுரை சக்தியை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. திரிபுரை சக்தியின் அருள் இல்லாமல் படைத்தல், மறைத்தல், காத்தல், அருளல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. திரிபுரை சக்தியில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.

கருத்து:

பாடல் #6 இல் இதே கருத்தை சிவனுக்கு அருளியிருக்கும் திருமூலர் இப்பாடலில் சக்திக்கும் அருளியிருக்கின்றார். இதன் மூலம் அசையா சக்தியாகிய இறைவனும் அசையும் சக்தியாகிய இறைவியும் ஒன்றே என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரணம் (பாடல் #383 இல் உள்ளது.) நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்தில் இருந்து வரும் ஒளியும் வேறு வேறாய் அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அது போல் சிவமும் சக்தியும் ஒன்றே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.