பாடல் #1073

பாடல் #1073: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே யைவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே யினிதுஇருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1072 இல் உள்ளபடி அனைத்திலும் ஓங்கி நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் ஒரு பெண் பிள்ளையாக இருக்கின்றாள். அவள் என்றுமே நீங்காத பச்சை நிறத்தை உடையவள். அவளே அனைத்திலும் மேலானவளாக நின்று ஐந்து தேவர்களான பிரம்மன் விஷ்ணு உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் ஆகியோரை படைத்து அவர்களின் செயல்களாகவே எப்போதும் இனிமையுடன் இருக்கின்றாள்.

கருத்து: திரிபுரை சக்தியானவள் ஐந்து தேவர்களின் செயல்களாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். பெண் பிள்ளை என்பது திரிபுரை தனக்கு என்று எதுவும் செய்யாமல் அனைவருக்கும் தேவையானதை எப்போதும் செய்கின்றவளாக இருப்பதைக் குறிக்கின்றது. நீங்காத பச்சை நிறத்தை உடையவள் என்பது எப்போதும் இளமையாகவே இருப்பதைக் குறிக்கின்றது. ரீங்காரத்தின் உள்ளே என்பது நிற்காமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் சக்தியைக் குறிக்கின்றது. இனிது இருந்தாள் என்பது அவள் செய்யும் அனைத்து செயல்களும் நன்மையாகவே இருப்பதைக் குறிக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.